திராவிட மாடல் ஆட்சிக்கு ஈரோடு கிழக்கு மக்கள் அங்கீகாரம்: ஜவாஹிருல்லா

By சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: “ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி, திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் அளித்துள்ள அங்கீகாரம்” என்று மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி. கே.எஸ்.இளங்கோவனின் வெற்றி திமுகவின் திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் அளித்துள்ள அங்கீகாரமாக அமைந்துள்ளது.

அதிமுக மற்றும் பாஜகவின் பொய்ப் பரப்புரைகள் மக்கள் மத்தியில் எடுபடவில்லை. இந்த வெற்றி என்பது மதச்சார்பின்மைக்குக் கிடைத்த வெற்றி. பாசிச பாஜகவை முதுகில் சுமக்கும் அதிமுகவிற்கு ஈரோடு மக்கள் அளித்துள்ள தண்டனை. இந்த வெற்றி என்பது எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியின் மாபெரும் வெற்றிக்கு முன்னோட்டமாக அமைந்துள்ளது.

வலுவான கூட்டணியை அமைத்து இம்மாபெரும் வெற்றிக்கு வழிவகுத்த திமுக தலைவரும்,முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் களப்பணியாற்றிய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் அனைத்து கட்சி நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE