சென்னை: உணவுப் பொருட்களை கிடங்கிகளுக்கு கொண்டு செல்வது தொடர்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கோரிய டெண்டர்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்காமல் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், உணவுப் பொருட்களை, மாவட்ட கிட்டங்கிகள், அமுதம் அங்காடிகளுக்கு கொண்டு செல்வதற்காக வாகனங்களை பணியமர்த்துவது தொடர்பாக டெண்டர்கள் கோரியது.இந்த டெண்டர்களுக்கு தடை விதிக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் நதியழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குகள் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுக்களில், உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட மத்திய அரசின் சுற்றறிக்கையின் அடிப்படையில், மாநில அளவிலான குழு இந்த டெண்டர்களை கோரியுள்ளது. இது தமிழ்நாடு டெண்டர் வெளிப்படைத்தன்மை சட்டம் மற்றும் விதிகளுக்கு விரோதமானது.இரண்டு கோடி ரூபாய்க்கு மேலான பணிகளுக்கான டெண்டருக்கு விண்ணப்பிக்க 30 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும். அதை மீறி 14 நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கியுள்ளது சட்டவிரோதமானது.
இந்த டெண்டரில் அனுபவமில்லாத நிறுவனங்ளும் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த டெண்டர்களை ரத்து செய்து, புதிதாக டெண்டர்கள் கோர உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தார்.
» இந்தியச் சந்தையில் விவோ வி27 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்
» கரோனா எங்கிருந்து பரவியது?- அமெரிக்காவின் எஃப்பிஐ புலனாய்வு அமைப்பு விளக்கம்
இந்த மனுக்கள் பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், "மாநில குழுக்கள் மூலம் உணவு பொருட்கள் கொள்முதல் செய்வது குறித்த டெண்டர் வெளியிட வேண்டும் என்ற மத்திய அரசின் சுற்றறிக்கைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எனவே, இந்த டெண்டர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும்" என உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 8-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.