“உரிய இழப்பீட்டை வழங்கிய பிறகே நிலங்களை கையகப்படுத்தலாம்” - அரசுக்கு சென்னை ஐகோர்ட் யோசனை

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: அரசு நலத் திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தும்போது, உரிய இழப்பீட்டை வழங்கிய பின்னர் நிலங்களை கையகப்படுத்தலாம் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

கடந்த 2001-ம் ஆண்டு வண்டலூர் பகுதியில் ஜிஎஸ்டி சாலை மற்றும் மீஞ்சூர் - கல்கத்தா நெடுஞ்சாலையை இணைக்கும் பகுதியில் புறவழிச்சாலை அமைக்க ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் நிலம் கையகப்படுத்தப்பட்டது. நில உரிமையாளர்களுக்கு ஒரு சென்ட்டுக்கு 1,150 ரூபாய் என இழப்பீடு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், கூடுதல் இழப்பீடு கோரி நில உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக ஏராளமான வழக்குகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது குறித்து வேதனை தெரிவித்தார். கையகப்படுத்தும் நிலங்கள் அமைந்துள்ள பகுதிகளுக்கு ஏற்ப இழப்பீட்டை நிர்ணயிப்பதன் மூலம் வழக்குகள் தாக்கல் செய்வது குறையும். இதுபோன்ற வழக்குகளை விரைந்து விசாரிக்க சிறப்பு அமர்வு ஏற்படுத்த தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்படும்.

மேலும், அரசு நலத்திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தும் முன் உரிய இழப்பீட்டை உரிமையாளர்களுக்கு வழங்கிய பின்னர் நிலங்களை கையகப்படுத்தலாம் என அரசுக்கு யோசனை தெரிவித்த நீதிபதி, மனுதாரர்களுக்கு சென்ட்டுக்கு 15 ஆயிரம் ரூபாய் என நிர்ணயித்து, கடந்த 2021 முதல் கணக்கிட்டு 15 சதவீத வட்டியுடன் 3 மாதத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE