சென்னை: டெல்லியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை அமைச்சர் உதயநிதி இன்று சந்தித்துப் பேசுகிறார்.
இளைஞர் நலன், விளையாட்டு மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இந்நிலையில், அமைச்சரான பின்னர் முதல்முறையாக, 2 நாள் அரசு முறைப் பயணமாக நேற்று டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.
டெல்லியில் அவரை தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதிஏ.கே.எஸ்.விஜயன், இளைஞர் நலத் துறை செயலர் அதுல்யமிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர்-செயலர் ஜெ.மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
தொடர்ந்து, நேற்று மாலை டெல்லி தமிழ்ச் சங்க நிர்வாகிகள், டெல்லி முத்தமிழ்ப் பேரவை நிர்வாகிகள் மற்றும் டெல்லி தமிழ்க் கல்விக் கழக நிர்வாகிகள் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். மேலும், டெல்லியில் பணியாற்றும் தமிழகப் பிரிவுஅதிகாரிகளுடன் கலந்துரையாடி னார். இரவு 7 மணியளவில் பஞ்சாப்ஆளுநரும், தமிழக முன்னாள் ஆளுநருமான பன்வாரிலால் புரோஹித் இல்ல திருமண நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.
இன்று (பிப். 28) மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களை சந்தித்து, துறை தொடர்பான பல்வேறு திட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். மாலை 4 மணிக்கு பிரதமர் மோடியை சந்திக்க உதயநிதிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் அவர் சந்திக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த சந்திப்புகளின் போது, தமிழகம் சார்ந்த பல்வேறு திட்டங்கள், நீட் தேர்வு விவகாரம், சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்துவது உள்ளிட்டவை குறித்து உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது.