ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 5 மணி வரை 70.58% வாக்குப்பதிவு: 2021-ஐ விட அதிகம்

By செய்திப்பிரிவு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் மாலை 5 மணி வரை 70.58% வாக்குகள் பதிவாகியுள்ளது. குறிப்பாக, கடந்த 2 மணி நேரத்தில் வாக்குப்பதிவு 11.3 சதவீதம் அதிகரித்து, 2021-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் பதிவானவதைவிட கூடுதலாக வாக்குகள் பதிவாகியுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று (பிப்.27) காலை 7 மணிக்கு தொடங்கியது. கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். இத்தேர்தலில் வாக்களிக்க 2.27 லட்சம் வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. தற்போது, மாலை 5 மணி வரை 70.58% வாக்குப் பதிவாகி உள்ளது. இதன்படி 1 லட்சத்து 60 ஆயிரத்து 603 வாக்காளர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்துள்ளனர். 77,181 ஆண்கள் மற்றும் 83,407 பெண்கள் தங்களது வாக்கினை பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், மதியம் 1 மணி வரை 55.56% வாக்குகள் பதிவாகி இருந்தது. ஆனால் அடுத்த 2 மணி நேரத்தில் வெறும் 4 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு நடந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி பொதுத்தேர்தலின்போது 66.56 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இன்னும் ஒரு மணி நேரத்தில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE