சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழகத்தில் 25.02.23 - சனிக்கிழமை நடைபெற்ற TNPSC தேர்வில் வினாத்தாள்களின் பதிவு எண்கள் மாறியிருந்ததன் காரணமாக பல்வேறு குளறுபடிகளுடன் தாமதமாக தொடங்கியுள்ளன. இதனால் பல முறைகேடுகள் நடந்துள்ளன. அதன் காரணமாக தகுதிவாய்ந்த தேர்வர்கள் தங்கள் வாய்ப்பினை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
TNPSC தேர்வு போன்ற முக்கிய தேர்வுகளையே முறையாக கையாளத் தெரியாத இந்த நிர்வாகத் திறனற்ற திமுக அரசை வன்மையாக கண்டிப்பதுடன்,உடனடியாக 25.02.23 நடைப்பெற்ற தேர்வை ரத்துசெய்து, வேறு ஒருநாளில், உரிய முறையில் மறுதேர்வினை நடத்திட வேண்டும் என இந்த திமுக அரசை வலியுறுத்துகிறேன்." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.