திமுக அரசின் சாதனைகளை மறைக்க முடியாது: முதல்வர் ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

சென்னை: “மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் எத்தனை பொய்களைத் துணைக்கு அழைத்தாலும் திமுக அரசின் சாதனைகளை மறைக்க முடியாது” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவு பெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப்.25) இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழகத்திற்கு விரோதமாகச் செயல்பட்டதால் மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் எத்தனை பொய்களைத் துணைக்கு அழைத்துக்கொண்டு வந்தாலும், கடந்த 21 மாதங்களில் திமுக அரசு செய்துள்ள எண்ணற்ற சாதனைகளை மறைக்க முடியாது.

செல்லும் வழியெங்கும் திரண்டு வந்த ஈரோடு கிழக்கு தொகுதி மக்களின் முகங்களில் அந்தச் சாதனைகளினால் ஏற்பட்ட மகிழ்ச்சி தெரிந்தது. மீதமிருக்கும் முக்கிய வாக்குறுதிகளும் விரைந்து நிறைவேற்றப்படும்.

திமுக அரசுக்கு வலுசேர்க்க மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈரோட்டு மண்ணின் மைந்தர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு வாக்களித்து மாபெரும் வெற்றியை வழங்கிடுவீர் எனக் கேட்டுக் கொள்கிறேன்" என்று அந்தப் பதிவில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE