காவிரிப்பட்டினம் விபத்தில் உயிரிழந்த 5 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டம் காவிரிப்பட்டினம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாயும், விபத்தில் கடும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள செய்தியில், ‘கிருஷ்ணகிரி மாவட்டம், காவிரிப்பட்டினம் அருகே வியாழக்கிழமை (பிப்.23) காலை தருமபுரியில் இருந்து ஆந்திராவிற்கு சென்றுகொண்டிருந்த டிராக்டர் மீது எதிர்பாராத விதமாக தனியார் பேருந்து பின்புறம் மோதியதில் டிராக்டரில் பயணம் செய்துகொண்டிருந்த தருமபுரி மாவட்டம், சவுளூர், நூலஅல்லி கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி ( 55). த/பெ.ஊமையன், மல்லி (50), வசந்தி ( 45), க/பெ.சின்னசாமி , முத்து (22) , த/பெ.சின்னசாமி மற்றும் வர்ஷினி (3 மாத குழந்தை), த/பெ.சதீஷ் ஆகியோர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். இச்சம்பவத்தில், கடும் காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிறப்பு சிகிச்சை வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாயும், விபத்தில் கடும் காயமடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தருமபுரி மாவட்டம் நூலகஹள்ளி அருகே உள்ள எம்.சவுளூர் கிராமத்தை சேர்ந்த 12 பேர் டிராக்டரில், ஆந்திரா மாநிலம் வி.கோட்டாவில் கத்தாழை செடிகளை அறுக்கும் பணிக்காக இன்று சென்றுள்ளனர். தருமபுரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் டிராக்டர் வந்துக் கொண்டிருந்தபோது, சிவகாசியில் இருந்து பெங்களூரு நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் சொகுசு ஆம்னி பேருந்து டிராக்டர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த 3 மாத பெண் குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE