நீட் தேர்வு விலக்கு தொடர்பாக 2 நாட்களில் ஆயுஷ் அமைச்சகத்திற்கு விளக்கம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

By செய்திப்பிரிவு

சென்னை: நீட் தேர்வு விலக்கு தொடர்பாக 2 நாட்களில் ஆயுஷ் அமைச்சகத்திற்கு விளக்கம் அளிக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் 2022 - 2023 ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் பட்டப்படிப்பில் 7.5% உள் ஒதுக்கீட்டில் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கையடக்க கணினியை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து விழா மேடையில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "அரசு பள்ளிகளில் படித்த மானவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீட்டின் கீழ் கையடக்க கணினி வழங்கப்படுகிறது. ஈரோட்டில் தேர்தல் நடைபெறுவதால் 10 மாணவர்களுக்கு தேர்தல் முடிந்தவுடன் கையடக்க கணினி தரப்படும்.

அரசுப் பள்ளியில் படித்து, மருத்துவப் படிப்பில் சேருவது என்பது சாதரமான விஷயம் இல்லை. நான் அரசுப் பள்ளியில் படித்து தான் இந்த நிலைக்கு வந்து உள்ளேன். அரசு மருத்துவக் கல்லூரியில் பயின்ற மாணவர்கள் தான் உலகின் தலைசிறந்த மருத்துவர்களாக உள்ளனர். நீட் தேர்வில் இருந்து விளக்கு பெறுவதில் போராடிவரும் ஒரே மாநிலம் தமிழகம் மத்திய ஆயுஷ் அமைச்சகம் நீட் விலக்கு குறித்து சில விளக்கங்களை கேட்டுள்ளது. இன்னும் இரண்டு தினங்களில் விளக்கம் அளிக்கப்படும்." இவ்வாறு அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "கடந்த டிசம்பர் 31ம் தேதியுடன் டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவி காலியானது. பின்னர் முதல்வர் வழிகாட்டுதலின் படி கடந்த ஜனவரின் 4ம் தேதி முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் சுப்புராஜ் தலைமையில் இரண்டு மருத்துவர்கள் அடங்கிய தேடுதல் குழு உருவாக்கப்பட்டது. ஆளுநரின் ஒப்புதலும் பெறப்பட்டது.

அந்தக் குழு அமைத்து இரண்டு மாதங்கள் நிறைவடைய உள்ள நிலையில் ஆளுநர் தான் இனி அந்த குழுவிற்கு வழி காட்ட வேண்டும். ஆளுநரின் சார்பில் அந்தக் குழுவிற்கு அலுவலர் ஒருவரை நியமிப்பார்கள். அந்த பணிகள் முடிந்த பிறகு அந்த தேடுதல் குழுவானது 3 பேரை தேர்ந்தெடுத்து ஆளுநரிடம் வழங்குவார்கள். அந்த மூவரில் ஒருவர் ஆளுநர் விரைவில் தேர்ந்தெடுப்பார் என்று கருதுகிறோம்." இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE