தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிக்கு ஆதரவாக உள்ளது: நாம் தமிழர் வேட்பாளர் மேனகா நவநீதன்

By செய்திப்பிரிவு

சென்னை: தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிக்கு ஆதரவாக உள்ளதாக நாம் தமிழர் வேட்பாளர் மேனகா நவநீதன் தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்தன், நாம் தமிழர் சார்பில் மேனகா நவநீதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். தொகுதியில் இறுதிக்கட்டப் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில் நாம் தமிழர் சார்பில் மேனகா நவநீதன் மரப்பாலம் பகுதியில் வீடு வீடாகச் சென்று ஓட்டு சேகரிக்க முறையான அனுமதி பெறவில்லை என்று பறக்கும் படையினருக்கு புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின்படி வேட்பாளர் மேனகா உள்பட 24 பேர் மீது சூரம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில் தன் மீது தவறான வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மேனகா நவநீதன் புகார் மனு அளித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிக்கு ஆதரவாக உள்ளது. மக்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அப்படி நடவடிக்கை எடுத்து இருந்தால் அந்த வேட்பாளரை தகுதி நீக்கம் செய்து இருக்க வேண்டும். இதை செய்யாமல் என் மீது வழக்குப் பதிவு செய்துள்ளார்கள். தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிக்கு ஆதரவாக உள்ளது. நாம் தமிழர் கட்சிக்கு, ஆளும் கட்சி நெருக்கடி அளிக்கிறது." இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE