“உண்மையில் இது மிகவும் கவலைக்குரிய விஷயம்” - ராணுவ வீரர் கொலை குறித்து ஆளுநர் மாளிகை ட்வீட்

By செய்திப்பிரிவு

சென்னை: கிருஷ்ணகிரி அருகே வேலம்பட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் ராணுவ வீரர் பிரபு கொல்லப்பட்டார்.

இதுதொடர்பாக தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ஆளுநரை முன்னாள் ராணுவ வீரர்கள் சிலர் சந்தித்து, திமுக கவுன்சிலர் தலைமையிலான ஆயுத கும்பலால் ராணுவ வீரர் எம். பிரபு கொடூரமாக கொல்லப்பட்டது குறித்தும், மாநில சட்ட அமலாக்க அமைப்பின் மெத்தன நடவடிக்கை குறித்தும் கூட்டு வேதனையை பகிர்ந்து கொண்டனர். உண்மையில், இது மிகவும் கவலைக்குரிய விஷயம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவ வீரர் கொலை விவகாரம்: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா வேலம்பட்டி எம்ஜிஆர் நகரை சேர்ந்த ராணுவ வீரர் பிரபாகரன் (31). இவரது சகோதரர் பிரபு (28). இவரும் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இதே கிராமத்தை சேர்ந்த நாகரசம்பட்டி பேரூராட்சி 1-வது வார்டு திமுக கவுன்சிலர் சின்னசாமி (58). இவரது மகன்கள் குருசூர்யமூர்த்தி (27), குணாநிதி (19), ராஜபாண்டியன் (30). இதில் குருசூர்யமூர்த்தி, சென்னை மாநகர ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த 8-ம் தேதி பிரபாகரன் பொது குடிநீர் தொட்டி அருகே துணிகளை துவைத்து கொண்டிருந்தார். இதுகுறித்து சின்னசாமி கேட்ட போது, அங்கு வந்த பிரபாகரனின் தாயாருக்கும், சின்னசாமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், இதுகுறித்து மீண்டும் அன்றைய தினம் மாலை சின்னசாமி, அவரது மகன்கள் குருசூர்யமூர்த்தி, குணாநிதி, ராஜபாண்டியன் மற்றும் சிலர் பிரபாகரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, ஆத்திரமடைந்த சின்னசாமி தரப்பினர், தாங்கள் வைத்திருந்த கத்தி, உருட்டைக்கட்டை, இரும்புக்கம்பியால் பிரபாகரன், அவரது தம்பி பிரபு, தந்தை மாதையன் ஆகியோரை தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த 3 பேரையும், அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக, ஓசூர் தனியார் மருத்துவனையில் சேர்த்தனர். ஓசூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராணுவ வீரர் பிரபு, 14-ம் தேதி உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் திமுகவை கண்டித்து பாஜக இன்று போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE