வெண்ணெய் தட்டுப்பாடு வராமல் இருக்க ஏற்பாடு - ஆவின் நிர்வாகம் உறுதி

By செய்திப்பிரிவு

சென்னை: வெண்ணெய் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, போதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவின் நிறுவனம் சார்பில், தினமும் 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. தற்போது, பால் கொள்முதல் 30 லட்சம் லிட்டராக குறைந்துள்ளது. இந்த பால், விற்பனைக்கே போதுமானதாக இல்லாததால், வெண்ணெய், பால் பவுடர், நெய் உள்ளிட்ட உபபொருட்கள் தயாரிப்பு குறைந்துள்ளது. வெளி மாநிலங்களிலும் பால் பற்றாக்குறை நிலவுவதால், அங்கும் வெண்ணெய் தயாரிப்பு குறைந்து, தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் விற்பனை இணையதளம் வாயிலாக வெளிமாநிலங்களில் இருந்து வெண்ணெய் கொள்முதல் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆவின் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆவின் நிறுவனத்துக்கு தினமும் 5 முதல் 6 டன் வெண்ணெய் தேவைப்படும். தற்போது, தேவையான வெண்ணெய், பால் பவுடர் மட்டுமே உள்ளது. தேவைக்கு அதிகமாக இல்லை. எனவே, வெண்ணெய், பால் பவுடர் ஆகியவற்றை எதிர்கால இருப்பு வைக்க முடியவில்லை.

நாடு முழுவதும் பால் உற்பத்தி குறைந்துள்ளது. தேவையை பூர்த்தி செய்ய வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும்போது, பிரச்சினை சரியாகிவிடும். ஆவின் வெண்ணெய் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க போதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெண்ணெய் தேவை அதிகரித்தால், வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE