காட்டுப் பகுதியில் அத்துமீறி நுழைந்து மான்வேட்டை - கர்நாடக வனத் துறையினரால் தமிழக மீனவர் சுட்டுக் கொலை

By செய்திப்பிரிவு

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கர்நாடக வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து மான்வேட்டையில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் மீது அம்மாநில வனத் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூர் அருகே தமிழக- கர்நாடக எல்லையில் காவிரி ஆற்றுடன் பாலாறு இணையும் இடம் உள்ளது. அடர்ந்த வனப் பகுதியான இங்கு யானைகள், மான்கள் அதிக அளவில் உள்ளன.

இந்நிலையில், கடந்த 14-ம் தேதி சேலம் மாவட்டம் கோவிந்தப்பாடி, தருமபுரி மாவட்டம் ஏமனூரை சேர்ந்த மீனவர்கள் 2 பரிசல்களில் இப்பகுதிக்கு சென்றுள்ளனர். கொளத்தூர் காரைக்காடு பகுதியை சேர்ந்த காரவடையான் என்கிற ராஜா (40), செட்டிப்பட்டியை சேர்ந்த ரவி (40), இளையபெருமாள் (40) உள்ளிட்ட 4 பேர் பரிசலில் கர்நாடக வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர்.

வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்ட பகுதியில் அவர்கள் நடமாடியதால், கர்நாடக வனத்துறையினர் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில்ராஜா, துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் ஆற்றில் விழுந்துள்ளார். மற்ற 3 பேரும் ஆற்றில் குதித்து தப்பித்து, ஊர் திரும்பியுள்ளனர்.

தமிழக மீனவர்கள் மீது கர்நாடக வனத் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய தகவல் பரவியதால், எல்லை பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, பாலாறு சோதனைச் சாவடியில் போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இதற்கிடையே, ஈரோடு மாவட்டம் பர்கூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காவிரிபுரம் ஊராட்சி பகுதியின் அடிப்பாலாற்றில் ராஜா உடல் நேற்று மிதந்து வந்தது. உடலை தீயணைப்பு வீரர்கள், போலீஸார் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதுகுறித்து போலீஸார் கூறியபோது, ‘‘கர்நாடக வனப் பகுதியில் அத்துமீறி நுழைந்து மான் வேட்டையில் ஈடுபட்டவர்களை எச்சரிக்கும் வகையில் அம்மாநில வனத் துறையினர் முதலில் வானத்தை நோக்கி சுட்டுள்ளனர். அப்போது, வனத் துறையினரை நோக்கி எதிர் தரப்பினர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதனால், கர்நாடக வனத் துறை எதிர் தாக்குதல் நடத்தியதில், குண்டு பட்டு ராஜா உயிரிழந்துள்ளார். அதேநேரம், தமிழக மீனவர்கள் 4 பேர் தங்களை கொலை செய்ய முயற்சித்ததாகவும், அவர்களது பரிசலில் இருந்து 2 மூட்டை மான் இறைச்சி,நாட்டு துப்பாக்கியை கைப்பற்றியதாகவும் கர்நாடக காவல் துறையில் அம்மாநில வனத் துறை அதிகாரிகள் புகார் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே, ராஜா மரணம் குறித்து முழுமையாக தெரியும். தமிழகம், கர்நாடகாவில் மான் வேட்டையில் ஈடுபட்டதாக அவர் மீதுஏற்கெனவே வழக்குகள் நிலுவையில் உள்ளன’’ என்றனர்.

பதற்றம் காரணமாக, இருமாநிலங்கள் இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

இதற்கிடையே, கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின்,உயிரிழந்த ராஜாவின் குடும்பத்துக்கு முதல்வர் நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE