உடல் உறுப்புகள் திருடப்பட்டதா? | அன்பு ஜோதி ஆசிரமம் நிரந்தர மூடல் - ஆவணங்களை கைப்பற்றி விசாரணை

By செய்திப்பிரிவு

விழுப்புரம்: விழுப்புரம் அருகே உள்ள குண்டலபுலியூர் கிராமத்தில் இயங்கி வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில் மனநலம் குன்றியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்றோர் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டனர்.

சலீம்கான் என்பவர், இக்காப்பகத்தில் சேர்த்த வயதான தனது மாமா ஜபருல்லாவை காணவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், சில தினங்களுக்கு முன்பு போலீஸாரும், வருவாய்துறையினரும் ஆசிரமத்தில் சோதனை நடத்தினர்.

அப்போது, உரிய அனுமதியின்றி இந்த ஆசிரமம் நடைபெற்று வருவது தெரியவந்தது. விசாரணைக்குப் பிறகு, இங்கு பராமரிக்கப்பட்டு வருபவர்களை அடித்து துன்புறுத்தியது, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது உள்ளிட்ட 13 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆசிரம நிர்வாகி அன்பு ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா மற்றும் ஊழியர்கள் என 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆசிரமத்தில் இருந்தவர்களில் சிலர் காணாமல் போனதாக கூறப்படும் நிலையில், அவர்களை பெங்களூருவில் உள்ள ஒரு ஆசிரமத்தில் சேர்த்ததாக மரியா விசாரணையின்போது தெரிவித்திருந்தார்.

இவ்வழக்கின் விசாரணை அலுவலரான டிஸ்பி பிரியதர்ஷினி தலைமையிலான போலீஸார் நேற்று முன்தினம் கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகே தொட்டகுப்பி என்ற இடத்தில் உள்ள ‘நியூ ஆர்க் மிஷன் ஆப் இந்தியா’ காப்பகத்தில் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து டிஎஸ்பி பிரியதர்ஷினி விழுப்புரத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, அன்பு ஜூபின் பேபி, தான் நிர்வகிக்கும் காப்பகத்தில் இருந்து, 53 பேரை பெங்களூருவில் உள்ள தன் நண்பர் ஆட்டோ ராஜா நடத்தும் காப்பகத்துக்கு அனுப்பியுள்ளார்.

அவர்களில் ஜபருல்லா உட்பட11 பேர் 4.3.2022 அன்று காப்பகத்திலிருந்து மாயமாகியுள்ளனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்நிலையில், நேற்று டிஎஸ்பி பிரியதர்ஷினி, விக்கிரவாண்டி வட்டாட்சியர் ஆதி சிவசங்கரி மன்னன் உள்ளிட்ட அதிகாரிகள் குண்டலபுலியூர் ஆசிரமத்தில் சோதனை நடத்தினர்.

ஆசிரம நிர்வாகி அவரது மனைவி ஆகிய இருவரின் பாஸ்போர்ட்கள், 10 செல்போன்கள், ஒரு லேப்டாப், ஒரு கணினி உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இந்த ஆசிரமம் தற்போது காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இரவு நேரங்களில், புதுச்சேரிக்கு அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனையில் இருந்து இந்த ஆசிரமத்துக்கு அவசர ஊர்திகள் வந்து சென்றதாக கூறப்படுகிறது.

உடல் உறுப்புகள் திருடப்பட்டதா?: 300 அனாதை பிணங்களை சேவை மனப்பான்மையோடு எரித்ததாக ஆசிரம நிர்வாகியின் மனைவி மரியா ஜூபின் விசாரணையில் தெரிவித்துள்ளார். இதில் ஆசிரமத்தில் தங்கி இருந்து இறந்தவர்களும் அடக்கமா, அவர்களின் உடல் உறுப்புகள் ஏதேனும் எடுக்கப்பட்டதா என்ற சந்தேகமும் காவல்துறையினருக்கு எழுந்துள்ளது. எத்தனை உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன அல்லது எரியூட்டப்பட்டன என்று ஆசிரமத்தில் உள்ள ஊழியர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வருவாய் துறையினரும் உடல்கள் அடக்கம் தொடர்பாக தனி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, அன்பு ஜோதி ஆசிரமத்தில் பாலியல் வன்கொடுமைக்குஉள்ளான 2 பெண்களை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் அகிலா முன்பு டிஎஸ்பி பிரியதர்ஷினி நேற்று ஆஜர்படுத்தினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE