கர்நாடக வனத்துறை துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் நிதியுதவி

By செய்திப்பிரிவு

சென்னை: கர்நாடக வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக மீனவர் ராஜா குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளது தமிழக அரசு.

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே கர்நாடக வனப்பகுதிக்கு மான் வேட்டையில் ஈடுபட்டதாக கர்நாடக வனத்துறை அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் தமிழக மீனவர் ராஜா என்பவர் உயிரிழந்தார்.

கர்நாடக வனத்துறையால், வனவிலங்குகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட வனப்பகுதியில், தமிழக மீனவர்கள் நான்கு பேர் நடமாடியதை, வனத்துறை அதிகாரிகள் பார்த்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். கர்நாடக வனத்துறையினர், நால்வரையும் சுற்றிவளைத்து துப்பாக்கிச்சூடு நடத்தியதில், ராஜா மீது துப்பாக்கி குண்டு பாய்ந்து, ஆற்றுக்குள் விழுந்துள்ளார். மற்றவர்கள் ஆற்றில் குதித்து தப்பி விட்டனர். ஊர் திரும்பியவர்கள் ராஜாவை கர்நாடக வனத்துறை அதிகாரிகள் சுட்ட சம்பவத்தை தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தையடுத்து, தமிழக - கர்நாடக எல்லைப்பகுதியான பாலாறு செக்போஸ்ட்டில் அதிகளவு போலீஸார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ராஜா குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளது. மேலும் ராஜா உயிரிழப்புக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதேநேரம், கர்நாடக மாநில வனத்துறையின் துப்பாக்கிச் சூட்டிற்கு கடுமையான கண்டனங்களையும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE