ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் | முதியோர், மாற்றுத் திறனாளிகளிடம் தபால் வாக்குகள் பெறும் பணி தொடக்கம்

By எஸ்.கோவிந்தராஜ்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடம் தபால் வாக்குகளை பெறும் பணி இன்று தொடங்கியுள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடக்க்கிறது. இத்தொகுதியில் உள்ள வாக்காளர்களில், 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கரோனாவால் பாதித்தோர், பாதிப்பு இருப்பதாக சந்தேகப்படுபவர்கள் தபால் மூலம் வாக்குப்பதிவு செய்யலாம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இவர்கள் 12சி படிவத்தினை பூர்த்தி செய்து, கடந்த 4-ம் தேதிக்குள் தொடர்புடைய ஓட்டு சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இவ்வாறு படிவம் வழங்கிய 80 வயதுக்கு மேற்பட்ட 321 நபர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 31 பேர் என மொத்தம் 352 வாக்காளர்களின் வீடுகளுக்குச் செல்லும் குழுவினர், அவர்களிடம் இருந்து அஞ்சல் வாக்குகளை இன்றும், நாளையும் (பிப்.16,17) பெறவுள்ளனர். இந்த வாக்குப் பதிவு குழுவினர் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன், வாக்காளரின் வீட்டுக்கு வாக்குச்சீட்டை எடுத்துச் சென்று, பதிவு செய்தவர்களின் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த பணியில், ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் தலா 7 பேர் அடங்கிய, 6 குழுக்கள் ஈடுபட்டுள்ளன. இன்றும் நாளையும் தபால் வாக்குகளை வழங்காதவர்களுக்கு, இறுதி வாய்ப்பாக ,20-ம் தேதி மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. அன்றும் இந்த குழுவினர் வீடுகளுக்கு சென்று தபால் வாக்குகளைப் பெற்றுக் கொள்ளவுள்ளனர். அன்று வாக்களிக்க முடியாதவர்கள், வரும் 27-ஆம் தேதி வாக்குச்சாவடிக்கு ச் சென்று நேரடியாக வாக்களிக்க இயலாது.

இன்று பதிவாகும் தபால் வாக்குகள், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், இன்று மாலை எண்ணப்பட்டு, பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்படவுள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
*

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE