பிபிசி அலுவலக ஐடி சோதனை | “அடக்குமுறையில் உலக ஊடகமும் தப்பவில்லை” - கே.பாலகிருஷ்ணன்

By செய்திப்பிரிவு

சென்னை: "உள்நாட்டு ஊடகங்களின் மீதான அடக்குமுறை தர்பாரில் உலக ஊடகமும் தப்பவில்லை" என்று டெல்லியில் உள்ள பிபிசி அலுவலவகத்தில் நடந்த ஐடி ரெய்டு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "குஜராத்திலும், நாடு முழுவதும் மோடி ஆட்சியின் வன்முறை தாண்டவத்தை ஆவணமாக்கியது பிபிசி. இப்போது அதன் டெல்லி அலுவலகத்தில் ஐடி ரெய்டு, ஊழியர்களுக்கு மிரட்டல்.

ஐடி துறை, அடியாள் துறையானதா?. உள்நாட்டு ஊடகங்களின் மீதான அடக்குமுறை தர்பாரில் உலக ஊடகமும் தப்பவில்லை.மிகப் பெரிய ஜனநாயகம் இந்தியாவை, கேலிக்கூத்தாக்குது மோடி கூட்டம்" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி செய்தி நிறுவனத்தின் பல்வேறு அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக வருமானவரித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், அதற்கான காரணம் குறித்து இதுவரை தெரிவிக்கவில்லை. விரைவில் தெரிவிக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

வருமானவரித் துறை சோதனையை அடுத்து அலுவலக பணியாளர்களின் மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக பிபிசி செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். எனினும், பிபிசி நிறுவனத்தின் இயக்குநர்களின் இல்லங்களில் இந்த சோதனை நடத்தப்படவில்லை.

குஜராத்தில் 2002-ம் ஆண்டு நிகழ்ந்த கலவரம் தொடர்பாக பிபிசி இரண்டு பகுதிகளைக் கொண்ட ஆவணப்படத்தை சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசு, அந்த ஆவணப்படம் இந்தியாவில் வெளியாகாமல் தடுத்துவிட்டது. இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE