கும்பகோணம்: கும்பகோணம் தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலில் காதலர் தினத்தை யொட்டி காதலர்களுக்குத் திருமணம் செய்து வைக்கும் போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தில் இந்து மக்கள் கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் தினேஷ், மாவட்டத் தலைவர் ரவி, மாவட்ட அமைப்பாளர் அரவிந்த், பூசாரி பேரவை மாவட்ட தலைவர் கார்த்தி மற்றும் பலர் பங்கேற்றனர்.
இந்து மக்கள் கட்சி, அனுமன் சேனா மாநிலப் பொதுச் செயலாளர் கா.பாலா தலைமை வகித்தார்.இவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலில் வந்திருக்கும் காதலர்களுக்குத் திருமணம் செய்து வைக்கும் வகையில், சீர்வரிசை, தாலி, புத்தாடைகள், தாம்பூலங்கள், தேங்காய், பழம், பூ உள்ளிட்ட மேளதாளத்துடன் கோயிலுக்குள் செல்ல முயன்றனர்.
மேலும், ஆபாசமாக, அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபடும் காதலர்களுக்குத் திருமணம் செய்து வைப்போம், ஆபாச காதலைத் தடுப்போம், தெய்வீக காதலை போற்றிடுவோம் என முழக்கமிட்டபட்டனர்.
» திருப்பூரில் செல்லா காசானதா ரூ.10 நாணயங்கள்? - வாங்க மறுப்பதால் பொதுமக்கள் அவதி
» ஈரோடு கிழக்கில் ஒவ்வொரு நிமிடமும் வெற்றி அதிகரித்துக் கொண்டே உள்ளது: கே.எஸ்.அழகிரி
அப்போது அங்கு வந்த போலீஸார், ”காலை முதல் காதலர்கள் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை, நீங்களும் உள்ளே செல்ல அனுமதியில்லை” எனக் கோயிலின் கதவினை தாழிட்டனர். பின்னரும் இந்து மக்கள் கட்சியினர் அங்கேயே சிறிது நேரம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.