ஈரோடு கிழக்கில் ஒவ்வொரு நிமிடமும் வெற்றி அதிகரித்துக் கொண்டே உள்ளது: கே.எஸ்.அழகிரி

By செய்திப்பிரிவு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் ஒவ்வொரு நிமிடமும் வெற்றி அதிகரித்துக் கொண்டே உள்ளதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகரி ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "திமுக கூட்டணி கொள்கை ரீதியான கூட்டணி. ஏற்கெனவே காங்கிரஸ் நின்ற தொகுதி என்பதால் முதல்வர் எங்களுக்கு இந்த தொகுதியை வழங்கி உள்ளார். நட்புக்கு இலக்கணம் இது தான். ஆனால் எதிர் அணியில், தமாகா போட்டியிட்ட தொகுதி என்பதால் அதிமுக அந்த தொகுதியை தமாகாவிற்கு வழங்கி இருக்க வேண்டும்.

ஆனால் தமாகாவிடம் இருந்து இந்தத் தொகுதியை பிடுங்கி, அவர்களை சிறுமைப்படுத்தி இவர்கள் தேர்தலில் நிற்கிற ஒரு பெருந்தன்மை தான் அதிமுகவிடம் உள்ளது. இந்த சிறுமையை அவர்கள் நிகழ்த்தி உள்ளனர். எங்களின் வெற்றி ஒவ்வொரு நிமிடத்திலும் அதிகரித்துக் கொண்டே உள்ளது.

இந்த தொகுதியில் மட்டும் ரூ.165 கோடி மதிப்பிலான பணிகளை நகராட்சி நிர்வாக துறையில் மட்டும், மறைந்த திருமகன் ஈவேரா செய்து முடித்துள்ளார். ஆகவே செயல்பட்ட சட்டமன்ற உறுப்பினராக அவர் இருந்துள்ளார். நாங்கள் செயல்பட்டு உள்ளோம்.

இன்னும் செய்ய வேண்டிய பணிகள் உள்ளன. அதை முடிக்க தந்தை வந்துள்ளார். மக்கள் எங்களுக்கு வாக்களிக்க தயராக உள்ளனர். எங்களின் வெற்றி மிக உறுதியானது என்பது பிரச்சாரத்தின் போது தெரியவந்துள்ளது" இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE