செங்கல்பட்டு: செங்கல்பட்டு, மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்தப் பல்கலைக்கழகத்தில் இறகுப்பந்து, வாலிபால் மற்றும் மேசைப்பந்து, உள் விளையாட்டு பயிற்சிக் கூடங்கள், உயிர் இயந்திரவியல் ஆய்வகம், சிந்தடிக் ஓடுதளம், தடகளம், கால்பந்து, ஹாக்கி மைதானங்கள், யோகா மையம், நூலகம், ஆராய்ச்சிக் கூடம், கருத்தரங்கக் கூடம், தியான மண்டபம் மற்றும் மாணவ, மாணவியர் தங்கும் விடுதிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, விடுதி மாணவர்களிடம் வழங்கப்படும் உணவின் தரம், குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மாணவ, மாணவியருக்கு எவ்வித குறையுமின்றி அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும் எனவும் விளையாட்டு மைதானங்கள் மற்றும் உள்விளையாட்டு பயிற்சிக் கூடங்களை நல்ல முறையில் பராமரித்திடவும், பயிற்சிபெறும் மாணவர்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள் வழங்கிடவும், ஒவ்வொரு மாணவர்களையும் தலைசிறந்த விளையாட்டு வீரர்களாக உருவாகும் வகையில் முறையான பயிற்சி அளித்திட வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், மாணவர்கள் அனைவரும் விளையாட்டுப் பயிற்சியுடன் கல்வியிலும் முழுக்கவனம் செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, துணைவேந்தர் முனைவர் சுந்தர், பதிவாளர் (பொ) ராமகிருஷ்ணன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.