‘மத்திய அரசின் பட்ஜெட் மக்களுக்கு பயன் தராது’ - ப. சிதம்பரம் கருத்து

By என். சன்னாசி

மதுரை: மதுரை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் சார்பில், 2023-24 ம் ஆண்டுக்கான மத்திய ‘பட்ஜெட் - ஓர் அலசல்’ எனும் தலைப்பில் சிறப்புக் கூட்டம் நேற்று நடந்தது. தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன் வரவேற்றார். முதுநிலை தலைவர் ரத்தினவேல் உள்ளிட்டோர் பேசினர்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது: மத்திய பட்ஜெட்டை சமுதாயம், பொருளாதாரம், அரசியல் கண்ணாடியில் பார்க்கலாம். பொருளாதாரம், சமுதாய கண்ணாடியில் இங்கு பேசுகிறேன். நாட்டின் வளர்ச்சிக்கு 4 உந்து சக்திகள் (இன்ஜின்கள்) தேவை. முதலில் மக்களின் நுகர்வு. மொத்த உற்பத்தில் 60% நுகர்வு தான். இரண்டாவது அரசு முதலீடு, 3வது தனியார் முதலீடு, 4 வது ஏற்றுமதி. இந்த 4 இன்ஜின்களும் சில காலம் முழு திறனோடு செயல்பட்டது. தற்போது அரசு முதலீடு என்ற இன்ஜின் மட்டுமே ஒடுகிறது. நுகர்வு சக்தி குறைந்துள்ளது.

கார் விற்பனை அதிகரிக்கிறது. டூவீலர் குறைந்துள்ளது. ஜவுளி போன்ற மக்களின் நுகர்வு குறைந்தது. இதற்கு நிதியின்மை, வேலையிழப்பு போன்றவையே காரணம். ஏற்றுமதி குறைந்து, இறக்குமதி அதிகரித்துள்ளது. சீனாவின் இறக்குமதி, ஏற்றுமதிக்குமான இடைவெளி என்பது 100 பில்லியன் டாலராக மாறியது. தனியார் முதலீட்டாளர்கள் தயங்கும் நிலையில், அரசு முதலீட்டை நம்பியே அரசு உள்ளது.

இவ்வாண்டு திருத்தப்பட்ட மதிப்பீட்டில் 7.5 லட்சம் கோடி அரசு முதலீடு எனக் கூறினர். அதனை இன்னும் நிறைவேற்றவில்லை. அடுத்தாண்டு ரூ.10 லட்சம் கோடி என்ற அரசின் முதலீட்டை நம்பியே அரசு உள்ளது. இது சாத்தியமில்லை. 6.5 % முதல் 7% வரை வளர்ச்சி என்கின்றனர். ஆனால் எண்ணை பார்த்தால்தான் நம்ப முடியும். நாட்டின் வளர்ச்சி குறைகிறது. வளர்ச்சியடைவில்லை. கடன் பெறுவதற்கு உச்ச வரம்பு உள்ளது.

அமெரிக்க அரசு தற்போது இரு வாரத்திற்குள் கடன் வாங்கும் உச்ச வரம்பை உயர்த்தவில்லை எனில் யாருக்கும் சம்பளம் வழங்க முடியாத நிலை உருவாகும். இந்த ஆண்டு விவசாயத் துறைக்கு ஒதுக்கியதை விட சுமார் ரூ. 7 ஆயிரம் கோடி குறைவாக செலவழித்துள்ளனர். இது போன்ற கல்வி, மருத்துவம் போன்ற பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கிய நிதியை மத்திய அரசு குறைத்து செலவிட்டுள்ளது.

மதுரை எய்ம்ஸ்-ல் ஒரு செங்கல் மட்டும் இருந்தால் அதற்காக நாம் சந்தோஷப்படலாம். வரவு, செலவு திட்டத்தில் திருத்தப்பட்ட மதிப்பீட்டை பார்க்க வேண்டும். ஒரு மாதத்திற்கு கணவன் ரூ. 15 ஆயிரம் சம்பளம் தருவதாக கூறி, 12 ஆயிரம் மனைவியிடம் கொடுத்தால் போதிய செலவுகளை செய்ய முடியாது. அதுபோன்று இவ்வரசு கணவன் நிலையிலும், மக்கள் மனைவி நிலையில் மக்களும் உள்ளனர். ஒதுக்குவதை செலவழிப்பதில்லை. செலவழிக்கும் எண்ணம் இல்லை. ஏழை, சிறுபான்மை, பழங்குடி மக்கள் பாதிக்கின்றனர்.

உணவு, உரம், பெட்ரோலியத்திற்கு மானியம் இல்லை. உணவு, உரத்திற்கான மானியம் குறைத்தால் உணவு பொருட்கள் விலை உயரும், ஏழை, நடுத்தர மக்கள் நுகர்வை குறைப்பார்கள். மனம் உகந்து மாநிலங்களுக்கான நிதிகளை வழங்க வேண்டும். மாநில அரசின் ஏராளமான வரி மத்திய அரசுக்கு சென்றுவிட்டது. மத்திய அரசு மாநில அரசுகளுக்கு ரூ. 3 லட்சத்து 34 ஆயிரத்து 331 கோடி வழங்க வேண்டும்.

ஆனால் மாநில அரசுகளுக்கு ரூ. 2 லட்சத்து 74 ஆயிரத்து 934 கோடி வழங்கிய நிலையில், 64 ஆயிரம் கோடி குறைத்து வழங்கியுள்ளது. ஊராட்சி மன்றங்களின் திட்டங்கள் பாதிக்கின்றன. இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. மாநில அரசுக்கு எதிராக மத்திய அரசு செய்யும் துரோகம். மக்களின் அடிப்படை வசதிகள் பாதிக்கின்றன.

இதன் விளைவு வளர்ச்சி விகிதம் குறைந்து, தனிமனித வருமானமும் குறையும், கடந்த 10 ஆண்டின் சராசரி வளர்ச்சி விகிதத்தை கணக்கீட்டால் 5.6% வளர்ச்சி பெற வேண்டும். இதற்கு 2004 முதல் 2014 வரை 7.5 % வளர்ச்சி இருந்தது. கடந்த ஆட்சியை விட, இந்த ஆட்சியில் வளர்ச்சி குறைந்துள்ளது. பசித்த நாடுகள் தர வரிசையில்லும் சரிந்துள்ளோம். ஏற்ற, தாழ்வை குறைக்க வளர்ச்சி முக்கியம். ஜிஎஸ்டி ஏழைகளை பாதிக்கிறது. இதை முதலில் வெள்ளோட்டமாகவே அறிமுகம் செய்ய வலியுறுத்தியும் மத்திய அரசு கேட்கவில்லை.

2017 முதல் இதுகுறித்த வழக்குகளே நடக்கிறது. உலக வளர்ச்சி கடந்த ஆண்டைவிட குறைதல், உலக வர்த்தகம் மெத்தனமாகுதல், உக்ரைன் போரால் பாதிப்பு போன்ற நிலைகளே அடுத்து நடக்கும் என கணிக்கிறேன். இவற்றை கருத்தில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கவில்லை. நடுத்தர மக்களுக்கான வருமான சலுகை என்ற அறிவிப்பு, சேமிப்பை குறைத்து மக்களை செலவிட தூண்டியுள்ளனர். மக்களுக்கு பயன் தராத பட்ஜெட் அறிவித்துள்ளனர். இதை திருத்தி வெளியிடலாம். அது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்." இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE