ராஜபாளையம்: மதுரை மண்டல தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் அலுவலக்ததில் நடைபெற்ற கூலி உயர்வு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து 13 நாட்களாக நடைபெற்று வந்த விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
ராஜபாளையம் அருகே தளவாய்புரம் பகுதியில் கூலி உயர்வு கேட்டு விசைத்தறி தொழிலாளர்கள் கடந்த 30-ம் தேதி முதல் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதுகுறித்து விருதுநகர் மாவட்ட துணை ஆணையர் அலுவலகம், ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகங்களில் 7 முறை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் வேலைநிறுத்தம் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இந்நிலையில் மதுரை மண்டல அலுவலகத்தில் தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நேற்று விசைத்தறி உரிமையாளர் சங்கம் மற்றும் தொழிற்சங்கங்கள் இடையே கூலி உயர்வு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் மூன்று ஆண்டுகளுக்கான ஒப்பந்தத்தில் முதல் ஆண்டில் 6 சதவீதமும் அடுத்த இரு ஆண்டுகளுக்கு 5 சதவீதம் என 11 சதவிதம் கூலி உயர்வுக்கு உரிமையாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் சம்மதித்ததை அடுத்து பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. இதையெடுத்து தொடர்ந்து 13 நாட்களாக நடைபெற்று வந்த விசைத்தறி தொழிலளார்கள் வேலைநிறுத்த போராட்டம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது.