போக்குவரத்து விதிமீறல்: சென்னையில் சிறப்பு வாகனத் தணிக்கை மூலம் ரூ.90 லட்சம் அபராதம் வசூல்

By செய்திப்பிரிவு

சென்னை: சிறப்பு வாகன தணிக்கையின் மூலம் மோட்டார் வாகன விதிகளின் கீழ் நிலுவையில் உள்ள சுமார் 15,000 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு அபராதத் தொகையாக ரூ.90,52,690 வசூலிக்கப்பட்டது என்று சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், மோட்டர் வாகன சட்டத்தை திறம்பட அமல்படுத்துவதன் மூலமும், விழிப்புணர்வு பிரச்சாரங்களை ஏற்பாடு செய்வதன் மூலமும் சாலை போக்குவரத்து விபத்துகளில் ஏற்படும் விபத்து மற்றும் இறப்பு விகிதத்தை குறைக்க சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் கடுமையான முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

சென்னை பெரு நகரத்தில் பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக சராசரியாக 6000க்கும் மேற்பட்ட வழக்குகள் தினசரி பதிவு செய்யப்படுகின்றன. இருப்பினும் சில விதிமீறல் செய்பவர்கள் அபராதத் தொகையை சரியான நேரத்தில் செலுத்துவதில்லை. எனவே 11/04/2022 அன்று பெருநகரத்தில் 10 அழைப்பு மையங்களை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் விதி மீறி அபராதம் செலுத்தாதவர்களை தொலைபேசியின் மூலம் கடந்த 2022 ஆண்டு விதிமீறல் செய்து அபராதம் செலுத்தாதவர்களை தொலைபேசியில் அழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விழிப்புணர்வு மூலம் உரிய பதில் கிடைக்காததால் 09.02.2023 அன்று 159 இடங்களில் திடீர் வாகன சோதனை நடத்தப்பட்டது. இதில் 9,523 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ஆன்லைன் கட்டணம் மூலம் ரூ.28,82,270 அபராதம் வசூலிக்கப்பட்டது.

இந்த தொடர் நடவடிக்கைகளை பின்பற்றி சிறப்பு வாகன தணிக்கையின் மூலம் வழக்குகளை விரைந்து முடிக்க கடந்த 02/02/2023 மற்றும் 03/02/2023 அன்று நகரின் 166 இடங்களில் நடத்தப்பட்ட சிறப்பு இயக்கத்தில் 5,336 வழக்குகள் தீர்வு காணப்பட்டு ரூ.61,70,420 அபராதத் தொகையாக மாத தொடக்கத்தில் வசூலிக்கப்பட்டது.

மேலும் போக்குவரத்து விதிமீறுபவர்களில் ஈடுபடுபவர்கள் தங்களுக்கு கீழ் நிலுவையில் உள்ள வழக்குகளின் அபராதத் தொகையினை (கிரெடிட்/டெபிட் கார்டு, க்யூஆர் குறியீடு அல்லது ஆன்லைன் பேமெண்ட்) அபராதத்தைச் செலுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.இந்த தொடர் நடவடிக்கையின் விளைவாக, 14,859 நிலுவையில் உள்ள வழக்குகள் தீர்வு காணப்பட்டு, இந்த மாதத்தில் மட்டும் ரூ.90,52,690 அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டது.

பொதுமக்கள் இது ஒரு துன்புறுத்தல் என்று பாராமல், போக்குவரத்து விதிகளை மீறியதற்காக நிலுவையில் உள்ள வழக்குகளின் அபராதத் தொகையை செலுத்துவதற்கான விழிப்புணர்வு என்பதை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். எதிர்காலத்திலும் இதே போன்ற நடவடிக்கைகள் தொடரும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE