அரசு உதவிபெறும் தனியார் பள்ளி உபரி ஆசிரியர்கள் இடமாற்ற உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட் தடை

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் உபரி ஆசிரியர்களை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் உபரி ஆசிரியர்களை வேறு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்ய வேண்டுமென்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவில், ஆண்டுதோறும் மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர்களின் எண்ணிக்கையை ஜூலை இறுதிக்குள் முடிவு செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட பள்ளிகளிடம் ஆட்சேபங்களைப் பெற்று, ஆசிரியர்களின் எண்ணிக்கையை இறுதி செய்யவும். உபரி ஆசிரியர்களை, இடமாற்றம் செய்யும் நடவடிக்கையை அக்டோபர் 15ம் தேதிக்குள் முடிக்க வேண்டுமென கால நிர்ணயம் செய்தும் அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த நடைமுறையின் அடிப்படையில் இந்த ஆண்டிற்கான உபரி ஆசிரியர்களை இடமாற்றம் செய்வது தொடர்பாக கடந்த ஜனவரி 23-ம் தேதி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது.இதில் காஞ்சிபுரத்தை சேர்ந்த மரிய அக்சீலியம் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியைகள் அம்பிகாவேணி, சகாயராணி, மரியம்மா டெய்சி ஆகியோரை எஸ்எஸ்கேவி அரசு உதவிபெறும் மகளிர் மேல்நிலைப் நிலை பள்ளிக்கு இடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து மரிய அக்சீலியம் பள்ளி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதேபோல தங்கள் பள்ளி ஆசிரியைகள் ஜெசிந்தா, அஸ்வினி, பாத்திமா ஜெயமேரி, ஏஞ்சல் சகாய ரீகா ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து டாக்டர் கே.கே.நிர்மலா மகளிர் மேல்நிலைப் பள்ளி தரப்பிலும் வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனுக்களில், "ஒரு குழுமம் நடத்தும் பள்ளியில் உள்ள உபரி ஆசிரியர்களை அதே குழுமத்தில் உள்ள மற்றொரு பள்ளிக்கு தான் அனுப்ப வேண்டும். வேறு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்ய முடியாது. உயர் நீதிமன்றம் நிர்ணயித்த கால அவகாசத்தை பின்பற்றாமலும், மனுதாரர் பள்ளி ஆட்சேபம் தெரிவிக்க அவகாசம் வழங்காமலும், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

கல்வியாண்டு முடியும் நிலையில், ஆசிரியர்களை இடமாற்றம் செய்தால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும். எனவே, தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும். அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என்று மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்குகள் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தன. வழக்குகளை விசாரித்த நீதிபதி, மனுதாரர் பள்ளிகள் தரப்பு வாதங்களை ஏற்று, பள்ளிகளின் ஆட்சேபங்களை கேட்காமல் உபரி ஆசிரியர்களை இடமாற்றம் செய்த அரசின் உத்தரவிற்கு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE