சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் பொரருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இம்மாதம் 19 முதல் 24-ஆம் தேதி வரை பிரச்சாரம் மேற்கொள்வார் என்று அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், ‘நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் ஆணைக்கிணங்க தேமுதிக வேட்பாளர் எஸ்.ஆனந்தை ஆதரித்து கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிப்ரவரி 19-ம் தேதி முதல் பிப்ரவரி 24-ம் தேதி வரை, வீதி வீதியாக சூறாவளி பிரச்சாரம் செய்து முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பார் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 31-ம் தேதி தொடங்கி, 7-ம் தேதி நிறைவடைந்தது. காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர், அமமுக மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 96 பேர், 121 மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற இன்று (பிப். 10) மாலை 3 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டது. இதன்படி 8 பேர் மனுக்களை வாபஸ் பெற்றனர். குக்கர் சின்னம் ஒதுக்கப்படாததால் அமமுக வேட்பாளர் சிவ பிரசாந்த் வேட்புமனுவை வாபஸ் பெற்றார். மேலும் 7 பேர் தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர். இறுதியாக ஈரோடு கிழக்கு தொகுதியில் 75 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.