கல்லூரித் தோழர் - இயக்குநர் டி.பி.கஜேந்திரன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

By செய்திப்பிரிவு

சென்னை: பிரபல இயக்குநரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இயக்குநர் டி.பி.கஜேந்திரன் முதல்வர் ஸ்டாலினின் கல்லூரித் தோழர் என்பது குறிப்பிடத்தக்கது.

டி.பி.கஜேந்திரன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவர் இதய நோய்க்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டு வீட்டில் இருந்தபடியே ஓய்வு எடுத்துவந்தார். அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். இந்நிலையில் இன்று காலை டி.பி.கஜேந்திரன் உயிர் பிரிந்தது.

இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிரபல இயக்குநரும், நடிகரும், எனது கல்லூரித் தோழருமான இனிய நண்பர், திரு. டி.பி.கஜேந்திரன் அவர்கள் மறைவுற்ற செய்தி, மிகுந்த வருத்ததையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.

எங்க ஊரு காவல்காரன், பாண்டி நாட்டுத் தங்கம் போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியதுடன், பல்வேறு திரைப்படங்களில் நடிகராகவும் தோன்றி, கலையுலகிற்கு தமது சிறப்பான பங்களிப்பை வழங்கி வந்தவர்.
கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேரில் சென்று நலம் விசாரித்து வந்தேன்.

தற்போது எதிர்பாராத விதமாக அவர் உடல்நலக் குறைவால் காலமாகி இருப்பது வேதனையளிக்கிறது. திரு. டி.பி. கஜேந்திரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், திரையுலக நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE