மதுரை மாநகராட்சியில் 10 ஆண்டு போராட்டத்திற்கு பிறகு 11 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை; மதுரை மாநகராட்சியில் 11 அதிகாரிகளுக்கு கடந்த 10 ஆண்டிற்கு முன் நிர்வாக அலுவலர் மற்றும் கணக்கு அலுவலராக பதவி உயர்வு வழங்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு அரசு உறுதியாணை உத்தரவு வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வந்தது. தற்போது, அவர்களுக்கு பதவி உயர்வை உறுதி செய்து உத்தரவுப் பிறப்பித்துள்ளது. அதனால், இவர்கள் உதவி ஆணையர் பதவி உயர்வு படிபடியாக வழங்கலாம்.

மதுரை மாநகராட்சியில் பணி மூப்பு அடிப்படையில் 11 அதிகாரிகளுக்கு மாமன்ற ஒப்புதலுடன் கடந்த 2013ம் ஆண்டு நிர்வாக அலுவலர் மற்றும் கணக்கு அலுவலராக பதவி உயர்வு வழங்கப்பட்டது. அவர்கள், 2 ஆண்டுகள் தொடர்ந்து அந்த இந்த பதவிகளில் பணி செய்தால் அவர்களுக்கு உதவி ஆணையர் பதவி வழங்கலாம் என்ற விதிமுறை உள்ளது. ஆனால், நிர்வாக அலுவலர் மற்றும் கணக்கு அலுவலராக பதவி உயர்வு பெற்ற இந்த 11 மாநகராட்சி அதிகாரிகளுக்கும் அரசு, அந்த பதவி உயர்வுக்கான உறுதியாணை உத்தரவை வழங்காமல் இருந்தது.

அந்தப் பதவி உயர்வுகளை அங்கீகரித்து தமிழக அரசு உறுதி ஆணை உத்தரவு பிறப்பித்தால் மட்டுமே நிர்வாக அலுவலர் மற்றும் கணக்கு அலுவலராக பதவி உயர்வு பெற்ற அதிகாரிகளுக்கு அந்த பதவி உயர்வுக்கான ஊதியம் வழங்கப்பட வேண்டும். ஆனால், இந்த உறுதி ஆணை உத்தரவு வந்துவிடும் என்ற அடிப்படையில் மாநகராட்சி பதவி உயர்வு ஊதியம் வழங்கி வந்தது. அப்படி உறுதி ஆணை இல்லாமல் பதவி உயர்வுக்கான ஊதியம் வழங்கினால் அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து பிடித்தம் செய்யலாம்.

அதனால், பதவி உயர்வு பெற்றும் அரசு உறுதியானை வரப்பெறாமல் அதற்கான ஊதியம் பெற்று வந்த இந்த 11 அதிகாரிகளும் கடந்த 10 ஆண்டாக கலக்கத்தில் இருந்து வந்தனர். மேலும், உதவி ஆணையர் பதவி உயர்வும் கிடைக்காமல் தவித்து வந்தனர்.

ஆனாலும், இந்த 11 அதிகாரிகளை மாநகராட்சியில் உதவி ஆணையர் பணியிடம் காலியாக இருந்ததால் அந்த பணியிடங்களில் பொறுப்பு பணியாகவும், கூடுதல் பொறுப்பாகவும் இவர்களை மாநகராட்சி நியமித்தது. ஆனால், உதவி ஆணையர் பதவி வழங்கப்படவில்லை. அதனால், வெளிமாநகராட்சி, நகராட்சிகளில் பணிபுரியும் அதகிாரிகள் மாநகராட்சி உதவி ஆணையர்களாக அவ்வப்போது நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில் 10 ஆண்டு போராட்டத்திற்கு பிறகு இந்த 11 அதிகாரிகளுக்கும் கடந்த 2013ம் ஆண்டு மாநகராட்சி வழங்கிய நிர்வாக அலுவலர் மற்றும் கணக்கு அலுவலர் பதவி உயர்வுககான உறுதியானை உத்தரவை தமிழக அரசு பிப்., 2-ம் தேதி வழங்கி உள்ளது. இதற்கிடையில் இந்த 11 அதிகாரிகளில் ஒருவர் சில ஆண்டிற்கு முன் ஈரோடு மாநகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஒருவர் ஒய்வு பெற்றுவிட்டார். ஒருவர் இறந்துவிட்டார். மீதி 8 பேர் மட்டுமே மதுரை மாநகராட்சியில் உள்ளனர்.

அதனால், இந்த அதிகாரிகள் இனி மாநகராட்சியில் காலியாக உள்ள உதவி ஆணையர் பணியிடங்களுக்கு மாநகராட்சியே பணி மூப்பு அடிப்படையில் படிப்படியாக உதவி ஆணையராக நியமிக்கலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE