திருப்பூரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பேனர்கள்: மாநகராட்சி, காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: திருப்பூரில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை அகற்றக் கோரிய மனுவை மூன்று வாரங்களில் பரிசீலிக்க வேண்டும் என திருப்பூர் மாநகராட்சிக்கும், மாநகர காவல்துறைக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், இந்து முன்னேற்ற கழகத்தின் தலைவரும், வழக்கறிஞருமான கே.கோபிநாத் தாக்கல் செய்த மனுவில், திருப்பூரில் பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையான அனுமதியைப் பெறாமல், சட்டவிரோதமாக விளம்பர பலகைகளை வைத்துள்ளனர்.

இந்த விளம்பர பலகைகள், பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் பெரும் இடையூறாக உள்ளன. அரசு இடங்களை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அவற்றை அகற்றக் கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், காவல் ஆணையருக்கு மனு அளித்தேன். ஆனால் அந்த மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் ஆகியோர் அடங்கி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், "அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பர பலகைகளை அகற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவைச் சுட்டிக்காட்டி, மனுதாரரின் கோரிக்கை மனுவை மூன்று வாரங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்கும்படி, மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், காவல் ஆணையருக்கு உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE