திமுக எம்.பி கலாநிதி வீராசாமி பெயரில் போலி கணக்கு தொடங்கி மோசடி

By செய்திப்பிரிவு

சென்னை: வட சென்னை திமுக எம்.பி.கலாநிதி வீராசாமி. அண்மையில் இன்ஸ்டாகிராமில் இவரது பெயரில் போலி கணக்கு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. அதில், டாக்டர் கலாநிதி வீராசாமி படமும் வைக்கப்பட்டுள்ளது. அதை உண்மை என நம்பிய சிலர் அந்த கணக்கில் இணைந்துள்ளனர்.

திடீரென அந்த போலி கணக்கை ஆரம்பித்த மர்ம நபர்,`எனது வங்கி கணக்கில் திடீரென சர்வர் பிரச்சினை ஏற்பட்டுவிட்டது. இந்த நேரத்தில் எனக்கு அவசர பணத் தேவை ஏற்பட்டுள்ளது' என கூறி 10 இலக்க செல்போன் எண்ணை கொடுத்து, அதற்கு ஜிபே மூலம் பணம் அனுப்ப கேட்டுக் கொண்டுள்ளார். கொடுக்கும் பணத்தை அடுத்த சிலநாட்களிலேயே தந்து விடுவதாகவும் உறுதி அளித்துள்ளார். இதுகுறித்த அறிந்த எம்.பி கலாநிதி வீராசாமி அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக, ‘தனது பெயரில் இதுபோன்ற இன்ஸ்டாகிராம் கணக்கு இல்லை என்பதால் யாரும் பணம் அனுப்பாதீர்கள்’ என கேட்டுக்கொண்டார். ஆனாலும் அவரது பெயரில், தொடர்ந்து போலி இன்ஸ்டாகிராம் கணக்கு இயங்கியதால், சென்னை காவல் ஆணையரிடம் இது குறித்து அவர் புகார் தெரிவித்தார். அதன்படி சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE