ஆவின் தினத்தையொட்டி நுகர்வோருக்கு சலுகை

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையம் (ஆவின்) 1981 பிப். 1-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த தினம், ஒவ்வோர் ஆண்டும் ஆவின் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. ஆவின் தினத்தையொட்டி, இந்த மாதம் முழுவதும்பல்வேறு நிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தப்படுகின்றன. மேலும், நுகர்வோர், விற்பனையாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, ரூ.250-க்கு மேல் ஐஸ்கிரீம் வாங்கும் நுகர்வோருக்கு ரூ.10 பெறுமானமுள்ள ஐஸ்கிரீம், ரூ.500-க்கு மேல் ஐஸ்கிரீம் வாங்கும் நுகர்வோருக்கு ரூ.20 பெறுமானமுள்ள ஐஸ்கிரீம் இலவசமாக வழங்கப்படும்.

இந்த சலுகை சென்னையில் உள்ள ஆவின் பாலகங்களில் ஒரு மாதத்துக்கு வழங்கப்படும். இதேபோல, மொத்த, சில்லறை வியாபாரிகளுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது. 25 பனீர் (தலா 200 கிராம் எடை) பாக்கெட்களுக்கு மேல் வாங்கும் சில்லறை விற்பனையாளர்களுக்கு ஒரு பனீர் இலவசமாக வழங்கப்படும். 250 பனீர் பாக்கெட்கள் வாங்கும் மொத்த விற்பனையாளர்களுக்கு 10 பனீர் பாக்கெட்கள் இலவசமாக வழங்கப்படும்.

அம்பத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள நவீன பாலகத்தில் வரும் 5-ம் தேதி கோலப் போட்டி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர் முன்பதிவு செய்ய 9841673625 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று ஆவின் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE