திருப்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கு | குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்யக்கோரிய வடமாநிலக் கொள்ளையர்கள் மனு தள்ளுபடி 

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: திருப்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்யக்கோரி வடமாநில கொள்ளையர்கள் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் யூனியன் மில் சாலையில் உள்ள ஜே.கே ஜுவல்லரி என்ற நகைக் கடையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கடையை உடைத்து 3 கிலோ தங்கம், 28 கிலோ வெள்ளி, ரூ.25 லட்சம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இது தொடா்பாக கடையின் உரிமையாளர் ஜெயகுமாா் திருப்பூா் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த கொள்ளைச் சம்பவம் தொடா்பாக திருப்பூா் மாநகர காவல் ஆணையா் உத்தரவின்பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை போலீஸார் உறுதிப்படுத்தினர்.

இந்த வழக்கில் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த மஹ்தாப், பத்ருல், திலாகாஸ், முகமது சுப்ஹான் ஆகியோரை மகாராஷ்டிராவில் கைது செய்து காவல்துறையினர், கொள்ளையர்களை நாக்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணைக்காக தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்தனர். நகைக்கடையில் கொள்ளையடித்த 3 கிலோ தங்கம், 28 கிலோ வெள்ளி, 25 லட்ச ரூபாய் ரொக்க பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்திற்கு கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். தங்களுக்கு எதிரான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி, வட மாநில கொள்ளையர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் நீதிபதி நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வுமுன் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான மாநில கூடுதல் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ், இவர்கள் மீதான குற்றத்திற்கு அனைத்து ஆதாரங்களும் உள்ளன. இவர்கள் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டால், இவர்கள் இந்த வழக்கிலிருந்து தப்பிக்க நேரிடும் என்று வாதிட்டார். அரசுத்தரப்பு வாதத்தைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், குண்டர் சட்டத்துக்கு எதிராக வடமாநிலக் கொள்ளையர்கள் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE