ஆரணியில் போலீஸாரை இழிவாக பேசிய விசிக மாவட்ட செயலாளர் கட்சியிலிருந்து இடைநீக்கம்

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: ஆரணியில் போலீஸாரை இழிவாக பேசிவிட்டு தலைமறைவாக உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் பகலவன் (எ) பாஸ்கரன், கட்சியிலிருந்து 3 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் இட பிரச்சினை தொடர்பான புகாரில், விசாரணைக்கு அழைக்கப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் பாஸ்கரன், காவல் உதவி ஆய்வாளரை ஜாதியின் பெயரை குறிப்பிட்டு பேசி மிரட்டல் விடுத்தது சமூக வலைதளத்தில் வைரலானது. இதுகுறித்து தனித்தனியே 2 வழக்குகள் பதிவு செய்து பாஸ்கரன், ஒன்றிய செயலாளர் ரமேஷ் ஆகியோரை கடந்த 8-ம் தேதி போலீஸார் கைது செய்தனர்.

இதையடுத்து, நிபந்தனை ஜாமீனில் பாஸ்கரனுக்கு, ஆரணியில் கடந்த 26-ம் தேதி வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவர், போலீஸாரை இழிவாக பேசியது பெரும் சர்ச்சையானது. மேலும் அவர், நிபந்தனை அடிப்படையில் ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் கையொப்பமிடவும் வரவில்லை.

இந்நிலையில், போலீஸாரை இழிவாக பேசியது உட்பட 9 பிரிவுகளில், 50 பேர் மீது வழக்கு பதிவானது. இதையறிந்த பாஸ்கரன் தலைமறைவானார். 9 பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், பாஸ்கரனை கட்சியிலிருந்து 3 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்வதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளன் எம்.பி. தெரிவித்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்படும் என ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE