சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் நடந்த கடந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் வாங்கிய வாக்குகளில் சமத்துவ மக்கள் கட்சிக்கு பங்கும் உள்ளதாக அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து அதன் தலைவரும், நடிகருமான சரத்குமார் தலைமையில் இன்று (ஜன.24) தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சமத்துவ மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்களுடன் காணோலி காட்சி வாயிலாக சரத்குமார் ஆலோசனை நடத்தினார். இதில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட செயலர்கள் மற்றும் தேர்தல் நடக்கக் கூடிய ஈரோட்டை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், "ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் மற்றும் கடந்த ஓர் ஆண்டு காலத்தில் கட்சியின் செயல்பாடு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. எதிர்கால திட்டம் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
கடந்த முறை ஈரோடு தொகுதியில் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைத்து சமத்துவ மக்கள் கட்சி களம் கண்டது. அப்போது மக்கள் நீதி மய்யம் வாங்கிய வாக்குகள் 10 ஆயிரம். இதில் எங்களின் பங்கு என்ன என்பது தெரியும். கொங்கு மண்டலத்தில் சமத்துவ மக்கள் கட்சிக்கு ஆதரவு உள்ளது. இன்று மாலைக்குள் இடைத்தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக அறிவிக்கப்படும்" என்று அவர் கூறினார்.