சந்தன மரம் வெட்டிய 4 பேர் கைது; 11.5 கிலோ சந்தன கட்டைகள் பறிமுதல்

By எஸ்.ராஜா செல்லம்

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே சந்தன மரம் வெட்டிய 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

பென்னாகரம் வனச் சரகர் முருகன் தலைமையிலான வனத்துறையினரும், தருமபுரி வனப் பாதுகாப்புப் படையினரும் இணைந்து பென்னாகரம்-தருமபுரி நெடுஞ்சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். சாலை குள்ளாத்திராம்பட்டி பகுதியில் சென்றபோது சிலர் மரத் துண்டுகளை வைத்து சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, சந்தன மரத்தை வெட்டி துண்டுகளாக்கி சுத்தம் செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.

மேலும், அவர்கள் சாலை குள்ளாத்திராம்பட்டியைச் சேர்ந்த மகேந்திரன்(45), மண்ணேரி பகுதியைச் சேர்ந்த முருகன்(55), கிழக்கு கள்ளிபுரம் பகுதியைச் சேர்ந்த திம்மன்(47), மாணிக்கம்(67) ஆகியோர் என்பதும் தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 11.5 கிலோ எடை கொண்ட சந்தன கட்டைகளை பறிமுதல் செய்த வனத்துறையினர் 4 பேரையும் கைது செய்தனர். 4 பேரும் மாவட்ட வன அலுவலர் அப்பால நாயுடு முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அவர், கைது செய்யப்பட்ட 4 பேருக்கும் தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.4 லட்சம் அபராதம் விதித்தார்.

மேலும், ''தருமபுரி மாவட்ட வனப்பகுதிகளிலும், கிராமங்களிலும் யாரேனும் சந்தன மரம் வெட்டினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதுபோன்றவர்கள் குறித்து பொதுமக்கள் வனத்துறையின் கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 18004254586 என்ற எண்ணில் வனத்துறைக்கு தகவல் அளிக்கலாம். தகவல் தருவோர் விவரம் ரகசியமாக பராமரிக்கப்படும்'' என்று அப்பால நாயுடு தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE