தேவையில்லாமல் விசாரணையை தள்ளிவைக்கக்கூடாது - மாவட்ட நீதிமன்றங்களுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: மாவட்ட நீதிமன்றங்கள் விசாரிக்கும் வழக்குகளை விரைந்து விசாரிக்க உத்தரவிட முடியாது என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், காலதாமதம் செய்வதற்காக தேவையில்லாமல் விசாரணையை தள்ளிவைக்ககூடாது எனவும் அறிவுறுத்தி உள்ளது.

கீழமை நீதிமன்றங்களில் நடத்தப்படும் சிவில் வழக்குகளை விரைந்து முடிக்க அந்தந்த மாவட்ட நீதிமன்றம் விசாரணை நடத்தி வரும் நிலையில், விரைந்து விசாரிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், ''கீழமை நீதிமன்றங்களில் தொடரப்பட்ட சிவில் வழக்குகள் குறித்து அந்தந்த மாவட்ட நீதிமன்றம் விசாரணை நடத்தி வரும் நிலையில், விரைந்து விசாரிக்க உத்தரவிட முடியாது. மேலும் வழக்கு விசாரணையின்போது காலதமாதம் செய்வதற்காக தேவையில்லாமல் விசாரணையை தள்ளிவைக்ககூடாது.

வழக்கை காலதாமதம் செய்வதற்காக வழக்கை தள்ளிவைக்கக் கோரி மனுதாரரோ அல்லது எதிர் மனுதாரரோ நீதிமன்றத்தில் கூறினால் அதற்காக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற காலதாமதத்தால் பல வழக்குகள் கீழமை நீதிமன்றங்களில் கூட நிலுவையில் இருந்து வருகின்றன. கீழமை நீதிமன்றங்களில் வழக்கு விசாரணை முழுமையாக நடைபெற்று முடிந்த பின்னரே வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும். அதில் உயர் நீதிமன்றம் தலையிட்டு ஒரு சில வழக்குகளை மட்டும் விரைந்து விசாரிக்கும்படி உத்தரவிட முடியாது. விரைந்து விசாரணையை முடிக்கும் சூழல் இருந்தும், காலதாமதம் செய்வது தெரியவந்தால் மட்டுமே உயர் நீதிமன்றம் உத்தரவிட முடியும்.'' என தெரிவித்தார். மேலும், இதையடுத்து கீழமை நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரிக்க கோரிய மனுக்களை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE