தை அமாவாசை | ராமேசுவரத்தில் புனித நீராட குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்

By கி.தனபாலன்

ராமநாதபுரம்: தை அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

தை அமாவாசையை முன்னிட்டு புண்ணிய தலமான ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்க, ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்று அதிகாலை முதல் கூடினர். அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி தர்ப்பணம் கொடுத்த பின், ராமநாத சுவாமி கோயிலுக்குச் சென்று அவர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் காத்திருந்து, கோயிலுக்குள் உள்ள 22 புனித தீர்த்தக்கங்களிலும் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் பாம்பன் பாலம், ராமேசுவரம் நகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தீர்த்தவாரி: தை அமாவாசையை முன்னிட்டு அக்னி தீர்த்தக் கடற்கரையில் ராமர், சீதா, லட்சுமணர் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளும் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமர் பூஜித்த பகுதியான திருப்புல்லாணி அருகே சேதுக்கரை கடற்கரையில் இன்று அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு புனித நீராடினர். பின்னர் அங்குள்ள ஜெயவீர ஆஞ்சநேயர் மற்றும் திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதப் பெருமாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் கடலுக்குள் நவபாஷானம் அமைந்துள்ள தேவிபட்டினம் கடலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர் புனித நீராடி, நவபாஷானம், கடலடைத்த ஆதி ஜெகந்நாதப் பெருமாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE