மின்சார திருத்த சட்டத்தால் மாதம் ஒருமுறை மின் கட்டணம் உயராது: அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: மின்சார திருத்தச் சட்டத்தால் மாதம்ஒருமுறை மின் கட்டணம் உயராதுஎன மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள் ளார்.

திமுகவின் விளையாட்டு மேம்பாட்டு அணி நிர்வாகிகளுக்கான இரண்டாம் நாள் நேர்காணலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று தொடங்கி வைத்தார். இதில், திமுகவின் விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதி மாறன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:

மின்சார திருத்தச் சட்டம் காரணமாக மாதம் ஒருமுறை மின் கட்டணம் உயர்த்தப்படும் என செய்திகள் வெளிவந்துள்ளது. இது முற்றிலும் தவறானது. மத்திய அரசின் மின்சார திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தபோதே மிகக் கடுமையாக திமுகஎதிர்த்தது.

திமுக அனுமதிக்காது

தற்போது இந்த மசோதாநாடாளுமன்ற நிலைக்குழுவில் உள்ளது. இந்த மசோதாவில் மக்களுக்கு வழங்கப்படும் மானியம் குறித்த விளக்கம் இல்லை. மின்சார துறையை தனியார் மயமாக்கும் திட்டமாக இந்த சட்டம் உள்ளது. பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்வதுபோல் மின் கட்டணத்தை நிர்ணயம் செய்ய வழிவகுக்கிறது. எனவே, திமுக இதை ஒருபோதும் அனுமதிக்காது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறும். கூட்டணி கட்சியின்வெற்றிக்காக திமுகவினர் உழைப்பார்கள். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும்.

வேங்கைவயல் சம்பவம்

புதுக்கோட்டை வேங்கைவயல் சம்பவத்தில் யார் குற்றம் செய்திருந்தாலும் அவர்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கெனவே இந்த சம்பவத்தின் மீது முதல்வர் சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE