விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலையில் இன்று மாலை ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் பெண் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். 7 பேர் பலத்த காயமடைந்தனர். இவர்களில் 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைபெற்று வருகின்றனர்.
வெம்பக்கோட்டை அருகே உள்ள கனஞ்சாம்பட்டியில் சிவகாசியைச் சேர்ந்த மாயக்கண்ணன் என்பவருக்குச் சொந்தமான பேபி என்ற பெயரில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஆலையை விஸ்வநத்தத்தைச் சேர்ந்த கந்தசாமி என்பவர் லீசுக்கு எடுத்து நடத்தி வருகிறார். நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையின் அனுமதி பெற்று இயங்கி வரும் இந்த ஆலையில் 70-க்கும் மேற்பட்ட அறைகளில் பேன்ஸி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆலையில் 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், இன்றும் இந்த பட்டாசு ஆலையில வழக்கம்போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது,ஒரு அறையில் பேன்ஸி ரக பட்டாசுகள் தயாரித்தபோது உராய்வு ஏற்பட்டு திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இதில், அந்த அறை முழுவதும் இடிந்து தரைமட்டமானது.
» ‘கண்ணியமானது அல்ல’ - பிரதமர் மோடி குறித்த பிபிசி-யின் ஆவணப்படத்துக்கு மத்திய அரசு எதிர்ப்பு
அப்போது, அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த சத்திரப்பட்டியைச் சேர்ந்த முனீஸ்வரி (30) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், இந்த வெடிவிபத்து ஏற்பட்ட அறை அருகே பட்டாசு தயாரித்துக்கொண்டிருந்த அப்பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி (26), மாரிமுத்து (34), ராஜ்குமார் (38), மகேஸ்வரன் (42), மாரியப்பன் (42), தங்கராஜ் (49), ஜெயராஜ் (72) ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
தகலறிந்த வெம்பக்கோட்டை போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் இரு வாகனங்களில் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, இடிபாடுகளில் சிக்கி உடல் சிதைந்த நிலையில் ஆண் சடலம் ஒன்றும் கண்டுபிடித்து மீட்கப்பட்டது. அவர் யார் என்பது உடனடியாகத் தெரியவில்லை. மேலும், காயமடைந்த கருப்பசாமி, மாரிமுத்து, ராஜ்குமார், மகேஸ்வரன் ஆகியோர் உடல் முழுவதும் பலத்த தீக்காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தா நிலையில் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மேலும், மாரியப்பன், தங்கராஜ், ஜெயராஜ் ஆகியோர் சாத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், விபத்தில் உயிரிழந்த அடையாளம் தெரியாத நபர் யார் என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.