கோவை - திண்டுக்கல் இடையே சிறப்பு ரயில் சேவை தொடக்கம்: தென் மாவட்ட மக்களிடையே வரவேற்பு

By செய்திப்பிரிவு

உடுமலை: உடுமலை சுற்று வட்டாரத்தில் தென்மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர். பெரும்பாலான பகுதிகளுக்கு ரயில் சேவை இல்லை. அதனால் பேருந்துகளை நம்பியே பயணிக்க வேண்டியுள்ளது.

இந்நிலையில், தைப்பூசத்தை முன்னிட்டு பழநி பக்தர்களின் வசதிக்காக, கடந்த 13-ம் தேதி முதல் வரும் 18-ம் தேதி வரை கோவை - திண்டுக்கல் இடையே சிறப்பு ரயிலை இயக்க தெற்கு ரயில்வே முன் வந்தது. அதன்படி, காலை 11 மணிக்கு உடுமலை ரயில் நிலையம் வரும் சிறப்பு ரயில், பகல் 1 மணிக்கு திண்டுக்கல் சந்திப்பை அடைகிறது.

இந்த ரயில் மூலமாக திண்டுக்கல் செல்லும் பயணிகள், அங்கிருந்து அடுத்த 25 நிமிடத்தில் வரும் கோவை - நாகர் கோவில் ரயிலை பிடிக்கலாம். அதன் மூலமாக மதுரை, விருதுநகர், சாத்தூர்,கோவில்பட்டி, திருநெல்வேலி, நாகர்கோவில் வரை செல்லலாம். இதனால், தென் மாவட்ட மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE