அவை மரபை ஆளுநர் மீறியதை குடியரசுத் தலைவரிடம் எடுத்துரைத்தோம்: டெல்லியில் டி.ஆர்.பாலு பேட்டி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையாற்றியபோது நடைபெற்ற நிகழ்வுகள் தொடர்பாக தமிழக சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, திமுக எம்.பி.க்கள் வில்சன் மற்றும் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் அடங்கிய குழுவினர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, "குடியரசுத் தலைவரை நாங்கள் சந்தித்தோம். தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை அவரிடம் வழங்கினார். தமிழக சட்டப்பேரவையில் கடந்த 9-ஆம் தேதி, அவை மரபுகளை மீறி ஆளுநர் ஆர்.என்.ரவி நடந்து கொண்டது பற்றி எடுத்துரைத்தோம்" என்றார்.

திராவிட நாட்டில் சனாதனம் எடுபடாது: செய்தியாளர்கள் சந்திப்பில் டி.ஆர்.பாலுவிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட அதற்கு பதிலளித்த அவர், "சட்டப்பேரவையின் மரபை மீறி தமிழக ஆளுநர் நடந்து கொண்டார். அவருடைய நடவடிக்கைகளை குடியரசுத் தலைவரிடம் எடுத்துக் கூறினோம். ஆளுநரின் செயல் அனைத்து மக்களையும் அவமதிக்கும் செயல். அதுமட்டுமல்லாமல் தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்னர் ஆளுநர் எழுந்து சென்றார். அந்தச் செயல் ஒட்டுமொத்த தேச மக்களையும் இழிவுபடுத்தும் செயல். இதைத் தான் நாங்கள் குடியரசுத் தலைவரிடம் எடுத்துக் கூறினோம்.

முதல்வரின் கடிதத்தில் அன்றைய சம்பவங்கள் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன. அதை வாசித்துவிட்டு குடியரசுத் தலைவர் முடிவெடுப்பார். அவர் என்ன முடிவெடுப்பார் என்பதை நாம் கணிக்க முடியாது. ஆளுநரை நியமிப்பதே உள்துறையும், குடியரசுத் தலைவரும்தான். அதனால் எப்படி நியாயம் கிடைக்கும் என்று நீங்கள் எழுப்பும் ஊகங்கள் அடிப்படையிலான கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல இயலாது. அரசியலில் சில நெளிவு சுழிவுகள் உள்ளன. அதன்படி கவனமாகத் தான் எந்த முடிவும் எடுக்கப்பட வேண்டும். ஆகையால், குடியரசுத் தலைவரின் முடிவு என்னவாக இருக்கும் என்றெல்லாம் எங்களுக்குத் தெரியாது. ஆனால், நாங்கள் ஆளுநர் உரையில் இருந்த சில பத்திகளை அவர் தவிர்த்தது, தேசிய கீதத்தை புறக்கணித்தது பற்றி பேசிவந்துள்ளோம்.

தமிழக ஆளுநர் தொடர்ந்து இவ்வாறு நடக்கிறார் என்றால், அவருக்கு தமிழ்நாட்டில் சனாதன கொள்கையை நிலைநாட்ட வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் தமிழ்நாடு திராவிட நாடு. பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் உருவாக்கிய தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்திற்கு மாறான கொள்கையை திணிக்க முடியாது. நீங்களும் கேள்விகளைக் கேட்கும்போது தமிழ்நாடு என்றே குறிப்பிடுங்கள்" என்றார்.

சர்ச்சையின் பின்னணி: சட்டப்பேரவையின் நடப்பாண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 9-ம் தேதி தொடங்கியது. அதில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றியபோது, சில பகுதிகளைத் தவிர்த்தார். மேலும் சில விஷயங்களை சேர்த்து வாசித்தார். இந்த நிகழ்வு பேரவையில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக வருத்தம் தெரிவித்ததுடன், ஆளுநர் உரையில் தவிர்த்தவற்றை சேர்த்தும், புதிதாக சேர்த்து வாசித்தவற்றை நீக்கியும், அரசால் அச்சடித்து வழங்கப்பட்ட தமிழ், ஆங்கில உரைகள் மட்டும் அவைக்குறிப்பில் இடம்பெறும் வகையிலும் தீர்மானம் கொண்டுவந்தார். அந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து அன்றைய தினம் இரவேசட்ட நிபுணர்கள், திமுக சட்டப் பிரிவினர், மூத்த வழக்கறிஞர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். ஆளுநர் விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவரை சந்தித்து முறையிடுவது என்று அப்போது முடிவெடுக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE