சென்னை: பெண்களுக்கான கட்டணம் இல்லாத பயண திட்டத்தின் கீழ் தினசரி 40 லட்சம் பயணங்கள் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தின் போது, விராலிமலை - துவரங்குறிச்சி வழித்தடத்தில் கூடுதலாக நகர பேருந்துகள் இயக்கப்படுமா என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர், "பெண்களுக்கான கட்டணம் இல்லா பேருந்து திட்டத்தில் தற்போது வரை 222.51 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தினசரி 40 லட்சம் பயணங்கள் மேற்கொள்ளப்படுகிறது. உறுப்பினரின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்." இவ்வாறு அவர் பதில் அளித்தார்.