சென்னை: மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த அரசு பரிசீலனை செய்து வருவதாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இன்றைய (ஜன.11) கேள்வி நேரத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.உதயக்குமார், "மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, "திருமங்கலம் நகராட்சி முதல் நிலை நகராட்சியாகும். தற்போது 60 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். 19 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. திருமங்கலத்தில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த ரூ.400 கோடி செலவு ஆகும். இதை பராமரிக்கும் அளவுக்கு அந்த நகராட்சிக்கு வருவாய் இருக்க வேண்டும். எனவே திருமங்கலத்தில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்தும் பணி அரசின் பரிசீலனையில் உள்ளது. நிதி நிலைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.