வடகிழக்கு பருவமழை - நாளை விலக வாய்ப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை காலம் ஆகும். வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டு சற்று தாமதமாக, அக். 29-ம் தேதி தொடங்கி, டிச.31-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த காலகட்டத்தில் இயல்பான மழை அளவு 44.3 செ.மீ. ஆனால் தற்போது ஒருசதவீதம் அதிக மழை கிடைத்துள்ளது. வடகிழக்கு பருவமழை காலம் டிச.31-ம் தேதியுடன் முடிவடைந்தாலும், அதன் தாக்கம் தென் மாநிலங்களில் தொடர்ந்தது.

இந்நிலையில், வடகிழக்கு பருவமழை நாளை (ஜன.12)விலகுவதற்கான சாத்தியக்கூறு உள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் அதை ஒட்டிய கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளப் பகுதிகளிலிருந்து ஜன.12-ம் தேதி விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று(ஜன.11) ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டத்துக்கு வாய்ப்பு உள்ளது. உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும். நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இரவு நேரம் ஓரிரு இடங்களில் உறைபனிக்கு வாய்ப்புள்ளது. சென்னை, புறநகர் பகுதிகளில் இன்று (ஜன.11) வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE