கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் 5 முதல் 8 வரையிலான வகுப்புகளைத் தொடங்க உயர் நீதிமன்றம் அனுமதி

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் 5 முதல் 8 வரையிலான வகுப்புகளைத் திறக்க அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் படித்த மாணவி மரணமடைந்ததை அடுத்து, கடந்த ஜூலை 17-ம் தேதி பள்ளி வளாகத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் பள்ளி உடைமைகளை அடித்து நொறுக்கியும், தீ வைத்தும் சூறையாடினர். இதனைத்தொடர்ந்து அந்த பள்ளி மூடப்பட்டது. பள்ளியை மீண்டும் திறக்கக் கோரி பள்ளியின் தாளாளர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கடந்த டிசம்பர் 5-ம் தேதி முதல் ஒரு மாத காலத்திற்கு 9 முதல் 12-ம் வகுப்பு வரயிலான மாணவர்களுக்கான வகுப்புகளைத் தொடங்க அனுமதியளித்தது.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, பள்ளிக்கு வரும் மாணவர்களின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய பள்ளி நிர்வாகத்திற்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளி நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், "மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக நிரந்தரமாக இரண்டு உளவியல் ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் மாவட்ட ஆட்சியர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், "பள்ளியின் நிலைமை தற்போது சீராக உள்ளது. பள்ளிக்கு உதவி ஆய்வாளர் தலைமையில் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 5 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகளைத் திறக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். மேலும் மற்ற வகுப்புகளை திறப்பது குறித்து பின்னர் முடிவு செய்யலாம் எனக் கூறிய நீதிபதி விசாரணையை ஆறு வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.

மேலும், பள்ளி வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல் துறையினர் சீருடையில் இல்லாமல் சாதாரண உடையில் இருக்க வேண்டும் என்று நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE