ராமேசுவரம்: ராமநாதபுரத்தில் தாயுமான சுவாமி தபோவனத்தில் உலக சிவனடியார்கள் திருக்கூட்டத்தினர் சார்பாக திருமுறை பண்ணிசைப் பெருவிழா மற்றும் அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ஓய்வுபெற்ற சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரி பொன்.மாணிக்கவேல் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோயில்களில் தெய்வசிற்ப திருமேனிகள் பாதுகாப்பான நிலையில் இல்லை.
தமிழகத்தில் 10 ஆயிரத்து 540 கோயில்கள் மிகவும் தொன்மையானவை. இவற்றில் சிலைப் பாதுகாப்பு அறைகள் உடனடியாகக் கட்ட வேண்டும். கோயில்களில் சிலைகள் திருடுபோனால் அவை ஊடகங்களுக்குத் தெரியாமல் மறைக்கப்படுகின்றன. இதன் மூலம் அந்தத் தகவல் மக்கள் அறியாத வகையில் மறைக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.