பெண் காவலருக்கு பாலியல் தொல்லை | சம்பவத்தன்றே எஃப்ஐஆர் பதிவு: டிஜிபி சைலேந்திரபாபு

By செய்திப்பிரிவு

சென்னை: பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்தவர்கள் மீது சம்பவம் நடந்த தினத்தன்றே எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.

சென்னை, புதுப்பேட்டை, ஆயுதப்படை வளாகத்தில் உள்ள காவலர், பல்பொருள் அங்காடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்தூக்கியின் இயக்கத்தை தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு இன்று (ஜன.6) தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து தொடுதிரை வசதி (KIOSK), Online Payment வசதிகளையும் துவக்கி வைக்கிறார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டிஜிபி சைலேந்திரபாபு, "போதைப் பொருள் கடத்தலை தடுக்க தமிழக காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆபரேஷன் கஞ்சா வேட்டை 1.0, ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0, ஆபரேஷன் கஞ்சா வேட்டை 3.0 ஆகிவற்றின் மூலம் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு தனிச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் மீண்டும் தமிழகத்திற்கு வந்திருக்கலாம் என்ற தகவல் உள்ளது. ஆனால் தற்போது வரை அது உறுதி செய்யப்பபடவில்லை. இதைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். சிறப்பு பிரிவு தொடர்ந்து காண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்தவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சம்பவம் நடந்த தினத்தன்றே எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. விசாரணை அடிப்படையில் பிறகு கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்கள் மீது சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும்." இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE