புரொபஷனல் கூரியர் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக வருமானவரி சோதனை நடந்தது

By செய்திப்பிரிவு

சென்னை: புரொபஷனல் கூரியர் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக வருமானவரி சோதனை நடந்தது.

சென்னை நுங்கம்பாக்கத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் புரொபஷனல் கூரியர் நிறுவனம், வரி ஏய்ப்பு செய்து முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, சென்னையில் அந்நிறுவனத்துக்குச் சொந்தமான நுங்கம்பாக்கம், மண்ணடி, ஆழ்வார்ப்பேட்டை, கிண்டி, கோயம்பேடு உட்பட 6 இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.

கரோனா காலகட்டத்தில் கூரியர் நிறுவனங்களில் அதிகளவில் முறைகேடுகளும், போதைப்பொருட்கள் கடத்தலும் நிகழ்ந்ததாக புகார் எழுந்ததன் அடிப்படையில் வருமானவரி சோதனை நடந்து வருவதாகக் கூறப்பட்டது.

நேற்று முன்தினம் நடந்த சோதனையில் நகை, பணம் உட்பட பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கின. இந்நிலையில், 2-வது நாளாக நேற்றும் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனை முழுமையாக முடிந்த பின்னர்தான், கூரியர் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததா? என்பது தொடர்பான முழு விவரங்களைத் தெரிவிக்க முடியும் என வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE