பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசுப் பேருந்துகளில் செல்ல 46 ஆயிரம் பேர் முன்பதிவு

By செய்திப்பிரிவு

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து அரசுப் பேருந்துகளில் பல்வேறு ஊர்களுக்குச் செல்ல 46 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து போக்குவரத்துத் துறை உயரதிகாரிகள் கூறியதாவது: பொங்கல் பண்டிகை வரும் 15-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனால் வெளியூர்களில் தங்கியிருப்போரில் பெரும்பாலானோர் வரும் 13-ம் தேதியே (வெள்ளிக்கிழமை) சொந்த ஊர்களுக்குப் பயணிக்கத் தொடங்கிவிடுவர்.

எனினும், முன்னேற்பாடாக வரும் 12-ம் தேதி முதலே சிறப்புபேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, அன்று வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் 651 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதேபோல, வரும் 13-ம் தேதிவழக்கமான பேருந்துகளுடன் 1,855 சிறப்புப் பேருந்துகளும்,வரும் 14-ம் தேதி 1,943 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இவ்வாறு சென்னையில் இருந்து 3 நாட்களுக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் பயணிக்க 46ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து முன்பதிவு நடைபெற்று வருகிறது. tnstc செயலி மற்றும் www.tnstc.in என்ற இணையதளம் ஆகியவற்றின் மூலமாக முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கும் 94450 14450, 94450 14436 ஆகிய எண்களை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE