தருமபுரி: தருமபுரி மக்களவைத் தொகுதியில் பிரதமர் போட்டியிட்டால் அவரை தோற்கடித்து காட்டுவோம் என்று தருமபுரி மக்களவை உறுப்பினர் கூறினார்.
தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில் குமார் நேற்று மாலை செய்தியாளர்களிடம் கூறியது: பாஜக தலைவர் அண்ணாமலை கர்நாடகாவில் பணியாற்றும்போது நான் பெருமைக்குரிய கன்னடர் என்று கூறிவிட்டு, தமிழகம் வந்ததும் மாற்றி பேசுவது போன்ற வழக்கம் என்னிடம் இல்லை. வீட்டுக்குள் சூடம் ஏற்றும்போது நான் சென்று கருத்து கூறுவதில்லை.
பொது வெளியில், அரசு விழாவில் சூடம் ஏற்றும்போது தான் நான் விமர்சிக்கிறேன். ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் தோல்வி என்கிறார் அண்ணாமலை. முதல் கட்ட திட்டம் மக்களுக்கு வெற்றிகரமாக தண்ணீர் வழங்கி வரும் நிலையில், பற்றாக்குறையை போக்க தற்போது இரண்டாம் கட்ட திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.
அண்ணாமலை பாஜக தலைவர் பதவிக்கு வந்த பிறகு நடந்த தருமபுரி மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் 59 இடங்களில் போட்டியிட்ட பாஜக அனைத்து இடங்களிலும் டெபாசிட் இழந்தது. அவர்கள் பெற்ற மொத்த வாக்குகள் 1,082 மட்டுமே. வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் இந்திய பிரதமர் தருமபுரி தொகுதியில் போட்டியிடட்டும். அவரை தோற்கடித்து திமுக வேட்பாளரை வெற்றிபெறச் செய்வோம், என்றார்.
» தமிழக கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு
» கலைகளே மனிதர்களை இணைக்கும் பாலம் - மியூசிக் அகாடமி விழாவில் அமெரிக்க துணை தூதரக அதிகாரி புகழாரம்