1,895 கவுரவ விரிவுரையாளர் பணியிடங்களுக்கு புதன்கிழமை முதல் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி: பொன்முடி தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,895 கவுரவ விரிவுரையாளர்கள் பணியிடங்களை நிரப்ப நாளை (ஜன.4) முதல் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி நடைபெறும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னையில் அவர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "தமிழக முதல்வர் பொறுப்பேற்ற இந்த 20 மாதங்களில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 4000 பேர் நிரந்தரமாகப் பணியமர்த்தப்படுவதற்கான ஆணையையும், 1895 கவுரவ விரிவுரையாளர்களை நியமிப்பதற்காகவும் உத்தரவிட்டிருந்தார்.

கடந்த 10 ஆண்டு காலங்களில் நடந்த இந்த கவுரவ விரிவுரையாளர்கள் நியமனங்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. இடஒதுக்கீடுகள் முறையாக பின்பற்றப்படவில்லை. எனவே தமிழக முதல்வர் சமூக நீதியின் அடிப்படையில், இந்த கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம் நடைபெற வேண்டும் என்பதில் தமிழக அரசு கவனமாக இருந்தது.

இதன்படி, தமிழகம் முழுவதும் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, பாட வாரியாக ரேங்க் அடிப்படையில் முறைப்படுத்தப்பட்டது. மொத்தமுள்ள இந்த 1895 பதவிகளுக்கு 9 ஆயிரத்து 915 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. முனைவர் பட்டம் ஜெஆர்எஃப் மற்றும் நெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. முனைவர் பட்டம் மற்றும் நெட் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு இரண்டாவதாகவும், முனைவர் பட்டம் மற்றும் ஸ்லெட் தேர்ச்சி பெற்றவர்கள் என்ற அதனடிப்படையிலேயே ரேங்க் வரிசை பின்பற்றப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை (ஜன.4) முதல் அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறும். சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின்னர் பணி நியமன உத்தரவுகள் வழங்கப்படும். முதற்கட்டமாக மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டின் கீழ் 76 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE